Showing posts with label கணபதி. Show all posts
Showing posts with label கணபதி. Show all posts

Friday, April 15, 2016

கணபதியும் அறுகம்புல்லும்

கணபதியும் அறுகம்புல்லும்

உலகப் படைப்புகள் யாவும், தாது (Mineral Kingdom), தாவரம் (Vegetable Kingdom), சங்கமம் (Animal Kingdom) என்னும் மூன்று பிரிவுகளுக்குள் அடங்குபவை;

இவற்றுள் தாவர வகுப்பைப் சேர்ந்தவை தன் நிலையிலேயே நின்ற இடத்திலேயே வளர்ந்து தத்தம் இனப் பெருக்கத்திற்கு உரிய மகரந்தம் ஆகியவற்றைத் தமக்குத்தானோ அல்லது காற்றின் மூலமோ, அல்லது நீரின் மூலமோ அல்லது ஈ, வண்டு முதலியவை மூலமோ பரிமாறிக் கொள்ளும்;

தாவரங்களில் சில, பூக்காமல் காயை மட்டும் கொடுக்கும்; அதற்கு உதாரணம்: அத்திமரம்;

சில பூத்தும், காய்க்காமலே தன் கிளைகள் மூலமே இனவிருத்தி செய்யும்; இதற்கு உதாரணம்: செவ்வரத்தை நந்தியாவர்த்தம்);

சில தாவரங்கள், பூத்தும், காய்த்த போதும், அதன் இனப்பெருக்கம் வேரின் மூலமே நடக்கும்: உதாரணம்: ஈரப்பலா;

சில தாவரங்கள், பூத்து, காய்த்த போதும், கிளைகள் மூலமே இனப்பெருக்கம் செய்யும்; உதாரணம்: பூவரசு கிளை;

ஆனால், எந்த ஒரு தாவரம் பூக்காமலும், காய்க்காமலும், தன் இடத்திலேயே எந்தக் காலத்திலும் சமாளித்து, கடைசிவரை அழியாமலும், இனப்பெருக்கத்துக்காக, காற்று, தண்ணீர், , வண்டு, முதலியவற்றின் உதவியை நாடாமலும், தனது இயக்கத்தினால் மட்டுமே இனப்பெருக்கம் ஏற்படுத்திக் கொள்ளும்

அதாவது தன் இந்திரியங்களை வெளிக்காட்டாமல், உள்ளடக்கமாகவே வைத்துக் கொண்டு, தன் சந்ததியை விருத்தி செய்யும்; அப்படி ஒரு தாவரமே "அறுகம்புல்".

அருகம்புல், தன் இனப்பெருக்கத்துக்குறிய பருவத்தை பூத்தும், காய்த்தும் காட்டுவதில்லை;

மனிதர்கள் இந்திரியப் பரிமாறலைக் கொள்வர்; அதனால்தான், மனிதர்கள் திருமணத்தில், தம்பதிகளின் சிரசில் அறுகு சாத்தி ஸ்நானம் பண்ணுவதும், திருமண முடிவில் அறுகரிசி கொண்டு வாழ்த்துவதும் உண்டு; அவர்கள் அறுகம்புல்லின் இந்திரிய அடக்கத்தைக் கொள்ள வேண்டுமாம்; இந்திரிய விரயம் கர்ப்ப காலத்தில் மட்டுமே ஒழிய மற்ற நேரங்களில் நிகழக்கூடாது என்பதைக் குறிப்பதற்காகவே!

மனிதர்கள் உண்ணும் உணவுகள் எல்லாமே, அன்ன ரசம் ஆகி, அதிலிருந்து இரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, எலும்பின் உட்சதை, சுக்கிலம், ஆகிய ஏழு தாதுக்களாகப் பிரிந்து கொள்ளும்; இவை ஒன்றிலிருந்து ஒன்றாக அதே முறையில் தோன்றும்; கடைசியாக உருவாகும் சுக்கிலதாது என்பது வேறாக மாறுவதில்லை; எனவே இதை பாதுக்காக்க, பாதுகாக்க அது வலுப்படுமாம்! பின்னர் அதுவே இந்த உடம்பில் ஒருவித ஒளியை (பிரபை) ஏற்படுத்துமாம்! இந்த பிரபைக்கு "ஓஜஸ்" என்று பெயராம்! இதிலிருந்து தோன்றுவதே தேஜஸ்! இது அமிர்தத்துக்கு ஒப்பானதாம்!

மனிதனின் உடல் மூன்று பங்குகளாக ஆளப்படும்; அவை, கபம், பித்தம், வாயு என்பன; இவற்றில் நான்கில் ஒருபங்கு கபத்தினாலும், நான்கில் ஒருபங்கு பித்தத்தினாலும், நான்கில் ஒருபங்கு வாயுவினாலும் ஆளப்படுமாம்; இதுவே வைத்திய சாஸ்திர உண்மையும்கூட!

சிசுக்களின் கரு உற்பத்திக்கு மேலே சொன்ன "சுக்கில சுரோணித்ததின்" கலப்பே ஆரம்பமானது; இந்த சுக்கில சுரோணிதத்தின் இருப்பிடமே மூலஸ்தானம் எனப்படும்; இந்த மூலஸ்தானத்திற்கு செல்வதற்கு அமைந்ததுவே அபானவாயு;இந்த அபானவாயு காற்றின் தன்மையைக் கொண்டு அமைந்திருப்பதால், அதை "ஆதிமூலம்" என்பர்!

சிசுக்கள் பிறந்தபின்னரே சுவாசிக்க ஆரம்பிக்கின்றன; சுவாசத்திற்கு பிராணவாயு தேவை; ஆனால் அவை பிறக்கும் முன்னர் கரு உற்பத்திக்கு ஆதாரமான சுக்கில சுரோணிதங்களை இயக்கும் வாயுவே அபானவாயு; எனவே இது மிக முக்கியமானது;

கணபதி தெய்வத்தின் இருப்பிடம் மூலஸ்தானம்; ஆகையால்தான், "மூலாதாரத்தின் மூண்டெழும் கனலை" என்று கணபதி அகவலில் சொல்கின்றனர்; இந்த இடத்தில் அமைந்து இயங்கும் அபான வாயுவை மூலவாயு என்பர்; சந்ததி விருத்திக்கும் மட்டும் அல்லாது, ஏனைய சௌகரியங்களின் பொருட்டும் சுக்கில சுரோணிதங்கள் நிலைமாற நேர்ந்தால், மூல வாயு பாதிக்க நேடுரிம்: அந்த பாதிப்பே "இரத்த அமுக்கம் அல்லது Blood Pressure என்பர்;
இந்த சுக்கில சுரோணித கலப்பு ஒழுங்குகளை இயல்பாகவே கொண்ட மூலிகைதான் "அறுகம்புல்". எனவே இதுவே மூலாதாரத்தை இருப்பிடமாகக் கொண்ட கணபதி தெய்வத்திற்கு அர்ச்சனை மூலிகையாக அமைக்கப்பட்டுள்ளது;
(நன்றி: கணபதி கடாட்சம் தொகுப்பு நூல்)
**


Saturday, March 19, 2016

காரிய சித்தி மாலை



காரிய சித்தி மாலை
(காசியப முனிவர் அருளியது)
(நாம் செய்யத் தொடங்கும் எல்லாச் செயல்களும் வெற்றி அடைய)

பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன் பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து சுரக்குமோ
சந்த மறை ஆகமக் கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.

உலகம் முழுதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும் பொருளெவனிவ்
வுலகிற் பிறக்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப்பயனை
ஊட்டுங் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.

இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீ ழும்பஞ் செனமாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக்
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதிபொற்
பாதம் சரணம் அடைகின்றோம்.

மூர்த்தி யாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான
தீர்த்த மாகி அறிந்தறியாத்
திறத்தி னாலும் உயிர்க்குநலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும் அப்பொருள்யாவன்
ஐயம் இன்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம்நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாத முடிவில் வீற்றிருக்கும்
நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியை
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

மண்ணில் ஓர்ஐங் குணமாகி
வதிவான் எவன் நீர், இடைநான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின்
மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன்வான் இடைஒன்றாம்!
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பாச அறிவில் பசு அறிவில்
பற்றற் கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.

(இந்த கணபதி துதியை மூன்றுதினங்கள் சந்திகளில் துதித்தால் சகல கரும சித்தியும் உண்டாகும்; சிந்தை மகிழச் சுகம் பெறும்; எப்போதும் துதித்தால் அட்ட சித்தியுறும்;)
**