காரிய சித்தி மாலை
(காசியப முனிவர் அருளியது)
(நாம் செய்யத் தொடங்கும் எல்லாச்
செயல்களும் வெற்றி அடைய)
பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன் பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து சுரக்குமோ
சந்த மறை ஆகமக் கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.
உலகம் முழுதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும் பொருளெவனிவ்
வுலகிற் பிறக்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப்பயனை
ஊட்டுங் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.
இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீ ழும்பஞ் செனமாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக்
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதிபொற்
பாதம் சரணம் அடைகின்றோம்.
மூர்த்தி யாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான
தீர்த்த மாகி அறிந்தறியாத்
திறத்தி னாலும் உயிர்க்குநலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும் அப்பொருள்யாவன்
ஐயம் இன்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.
வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம்நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாத முடிவில் வீற்றிருக்கும்
நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியை
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
மண்ணில் ஓர்ஐங் குணமாகி
வதிவான் எவன் நீர், இடைநான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின்
மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன்வான் இடைஒன்றாம்!
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.
பாச அறிவில் பசு அறிவில்
பற்றற் கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.
(இந்த கணபதி துதியை மூன்றுதினங்கள்
சந்திகளில் துதித்தால் சகல கரும சித்தியும் உண்டாகும்; சிந்தை மகிழச் சுகம்
பெறும்; எப்போதும் துதித்தால் அட்ட சித்தியுறும்;)
**
No comments:
Post a Comment