அண்டத்தில்
உள்ளதே பிண்டத்தில்.....
ஆலயம் =
ஆ+லயம்; (ஆ=ஆன்மா; லயம்=சேர்தல், ஒடுங்குதல்); ஆன்மா ஒடுங்குவதற்குறிய இடம்;
கோயில் =
கோ+இல்; (கோ=கடவுள், அரசன்; இல்=இல்லம், தங்குமிடம்); ஆன்மாக்களுக்கு
அருள்பாலிக்கும் பொருட்டு இறைவன் தங்கும் இடம்;
சைவ
சமயக் கோயில்கள் (கோவில்கள்) ஆகம விதிகளின்படியே அமைக்கப்படுகின்றன; சைவ ஆலயங்களில்,
சிற்பம், ஓவியம், தத்துவம், ஞானம், முதலிய பேருண்மைகளை உணர்த்தும் கலைகளையும்,
நுண்பொருள்களையும் காணலாம்;
அந்த
அமைப்புகள், ஆன்மாக்களுக்கு, பேரறிவுகளையும், உலகத் தோற்ற, ஒடுக்க,
விசித்திரங்களையும், பக்தி, வைராக்கியம், ஞானம், முதலியவற்றையும் உதிக்கச்
செய்கின்றன;
ஆலயங்களில்
ஆகமவிதிப்படி அமைந்த விமானம்-தூபி-சிகரம், கோபுரம், கொடிஸ்தம்பம் முதலிய பல
அங்கங்கள் அமையப் பெற்றவையாய், சித்திர, ஓவியச் சிறப்புக்களுடன் விளங்குபவைகளையே
முறைப்படி அமைந்த் கோயில் எனவும், அவ்வாறு தூபி அமைக்கபடாமல், விதிப்படியோ,
அல்லாதோ அமைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்படும் கோயில்களையே, மட ஆலயங்கள் என
பெரியோர் வகுப்பர்;
இவ்வாறாகிய
அமைப்புகளைவிட, இருதய கமல ஆலயத்தை விரித்து, ஞானப் பொருள் அமைய விதிப்படி
விளக்கும் இருதயப் பிரஸ்தார ஆலயத்தின் அமைப்புகள் இவைகளிலும் விநோதமாய் அமைக்கப்-பட்டிருக்கும்;
அவ்வாறு அமைந்ததே “சிதம்பர ஆலயமாகும்.”
(விமானம்-தூபி-சிகரம்
= இது கோயிலில் மூலஸ்தானத்தில் இருந்து மேல்நோக்கி, தாமரைப் பூ வடிவமாய் அமைந்து,
முடிவில் ஒரு கலசம் உடையதாய் இருக்கும்;
துவசத்தம்பம்—கொடிமரம்
= கொடி ஏற்றாமல் இருக்கும்போது, சிருஷ்டியாதி பஞ்சகிருத்தியங்களாகிய புறச்சார்பை
நோக்காது; சர்வ சங்கார காலத்தின் முடிவில், சிவபெருமான் தமது சத்தியை அடக்கிக்
கொண்டு நிற்கும், சொரூப நிலையைக் குறிப்பதாகும்;
கோபுரம்
= திருவடி அதாவது பாதத்தைக் குறிப்பது; கோவிலின் வாயிலில் கட்டப்பட்டிருப்பது; “வாய்
கோபுர வாசல்” என்று திருமூல நாயனார் கூறியுள்ளார்; அசல அல்லது தூல்லிங்கம் எனவும்,
ஆலயத்துக்குள் சென்று வழிபட இயலாதவர்கள், தூரத்தில் காண்பரவகளும், சிவனை காண்பதாகக்
கருதி, வணங்கும பொருட்டாக அமைந்தே கோபுரம்; கோபுர வணக்கம் திருவடி தரிசனம் ஆகும்;)
அண்ட
பிண்ட சமம்:
காணும் பிரபஞ்ச
உலகம் அண்டம், காணும் உடல் பிண்டம்; அண்டத்தில் அமைந்திருப்பவை பிண்டத்திலும்,
பிண்டத்தில் அமைந்திருப்பவை அண்டத்திலும் அமைந்துள்ளன என்பதே சைவ சமய நூற்
கொள்கைகள்; இவ்வுண்மையை சாதாரண மக்களாகி நாம் ஒப்பாவிட்டாலும், யோகிகளும்,
ஞானிகளும், நன்கு அறிவர்; அதனால் அவர்கள் கோயில் வழிபாட்டை வெறுப்பதில்லை;
“எண்டரும்
பூதமைந்தும் எய்திய நாடி மூன்றும்
மண்டல
மூன்றுமாகி மன்னிய புணர்ப்பினாலே
பிண்டமும்
அண்டமாகும் பிரமனோடு ஐவராகக்
கண்டவர்
நின்றவாறும் இரண்டிலும் காணலாமே!”
(கா.அருணாசலம்
அவர்கள் எழுதிய “சைவ சமய சிந்தாமணி” என்ற நூலில் இருந்து ஒரு பகுதி)
**
**
No comments:
Post a Comment