Wednesday, March 9, 2016

இராமனின் சாபம்



“இராமனின் சாபம்”

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கிறது; பிருகு என்று ஒரு முனிவர் இருக்கிறார்; அவருக்கு ஒரு மனைவி இருக்கிறார்; இந்த தேவர்-அசுரர் போரில், தேவர்கள் பக்கமாக விஷ்ணு போரிடுகிறார்; அப்போது, விஷ்ணு, தெரியாமல், பிருகு முனிவரின் பத்தினியைக் கொன்று விடுகிறார்; இதைப் பார்த்த பிருகு முனி, விஷ்ணு மீது, மிகுந்த ஆத்திரம் கொண்டு, "விஷ்ணுவே! எனக்கு என் மனைவி இல்லாமல் பண்ணி விட்டாய்; அதுபோல, நீயும் உன் பத்தினியைப் பிரிந்து, வருந்த வேண்டும்" என்று ஒரு பெரிய சாபத்தை கொடுக்கிறார்;

அந்த சாபத்தால், விஷ்ணு எடுத்த அவதாரமே இராம அவதாரம்; இராம அவதாரமானது விஷ்ணுவின் ஏழாவது அவதாரம்; இக்ஷவாகு வம்சம் என்று ஒரு வம்சம் உள்ளது; அதில் அஜன் என்ற மாமன்னர் இருக்கிறார்; அவரின் மகன்தான் தசரதன்; அந்த தசரதனுக்கும் அவர் மனைவி கௌசலைக்கும் மூத்த மகனாகப் பிறக்கிறார் இராமன்; தசரதன் புத்திரன் என்பதால் இவருக்கு தசரதி என்றும் பெயராம்; காகுத்தன் வம்சாவழியைச் சேர்ந்தவன் என்பதால் "காகுத்தன்" என்றும் பெயராம்; ரகு குலத்தில் பிறந்ததால் "ராகவன்" என்றும் பெயராம்;

பிருகு முனிவர் சாபத்தால், இராமன் நிம்மதியாக ஒருபோதும் மனைவியுடன் வாழவில்லை; காட்டுக்குப் போய், மனைவியைத் தொலைத்துவிட்டு, தேடித் திரிந்து, கடைசியாக, ராவணன், கும்பகர்ணன் இவர்களைக் கொன்று, சீதையை மீட்கும்போது, இராமனுக்கு வயது நாற்பதாம்; குடும்ப வாழ்வில் வாழ வேண்டிய காலத்தில் இராமனால் வாழ முடியவில்லை;

இந்த இராமனின் கதையை வடமொழியில் கூறியவர் வான்மீகி; இதுவே ஆதி காவியம் என்றும் சொல்கிறார்கள்; இது மொத்தம் ஏழு காண்டங்களைக் கொண்டது; 1) பால காண்டம், 2) அயோத்தி காண்டம், 3) ஆரணிய காண்டம் 4) கிஷ்கிந்தா காண்டம், 5) லங்கா காண்டம், 6) யுத்த காண்டம், 7) உத்தர காண்டம் என மொத்தம் ஏழு; இது மொத்தம் 24,000 கிரந்தங்களை (செய்யுள்களைக்) கொண்டது; இதில் இன்னொரு சிறப்பு உள்ளதாம்; ஒவ்வொரு ஆயிரம் பாடல்கள் முடிந்து தொடங்கும் முதல் பாடலின் முதல் வார்த்தை "காயத்திரி மந்திரத்தின்" ஒவ்வொரு எழுத்தில் ஆரம்பிக்குமாம்; எனவே இதை "காயத்திரி ரூபம்" என்றும் சொல்வர்;

இந்த பாடல்களை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து கம்ப ராமாயணம் என்று அழகு தமிழில் வழங்கியவர் கம்பர் என்ற கவிச் சக்கரவர்த்தி. இவர் இராமர் கதையை அப்படியே வைத்துக் கொண்டு, வர்ணனை எல்லாம் தமிழில் சொந்தமாகச் செய்துள்ளார் என்பதே கம்பராமாயணத்தின் தனிச் சிறப்பு; வான்மீகி, "லங்கா காண்டம்" என்று சொல்லியதை, கம்பர் "சுந்தர காண்டம்" என்று பெயர் மாற்றி உள்ளார்; கம்பராமாயணம் மொத்தம் 10,000 பாடல்களைக் கொண்டதாம்; ஆனால் இன்னும் 2,000 உள்ளதை ஒட்டக்கூத்தர் செய்து வைத்தார் என்றும் கூறுவர்;

சூர்ப்பனகை, சீதையைப் பற்றி இராவணனுக்கு கூறி ஆசையை ஊட்டுகிறாள், இப்படி:-

"இந்திரன் சசியைப் பெற்றான்
இருமூன்று வதனத்தோன்தன்
தந்தையும் உமையைப் பெற்றான்
தாமரைச் செங்கணானும்
செந்திருமகளைப் பெற்றான்
சீதையைப் பெற்றாய் நீயும்
அந்தரம் பார்க்கின் நன்மை
அவர்க்கு இலை உனக்கே, ஐயா."

தேவேந்திரன், சசிதேவியை அவன் மனைவியாக அடைந்திருக்கிறான்;

இருமூன்று ஆக மொத்தம் ஆறுமுகங்கள் கொண்ட முருகனின் தந்தையான சிவன், பார்வதியை மனைவியாக அடைந்திருக்கிறான்;

தாமரையில் இருக்கும் செங்கண்ணன் ஆன திருமால், செந் திருமகளான லட்சுமியை மனைவியாகப் பெற்றிருக்கிறான்;

இராவணனே! நீ, சீதையை அடைந்தாயென்று வைத்துக் கொள்;

இவ்வளவு பேரிலும் யார் உயர்ந்தவர் என்று பார்த்தால், சீதைப் பெற்ற நீதான் உயர்ந்தவன் ஆவாய்; நன்மை உனக்குதான், அவர்களுக்கு இல்லை."

இந்தப் பாட்டில், கவிச் சக்கரவர்த்தி வார்த்தையால் விளையாடி இருப்பாராம்;

"நன்மை அவர்கில்லை உனக்கே" என்றும் எடுத்துக் கொள்ளலாமாம்; அல்லது "நன்மை அவர்க்கு, இல்லை உனக்கு" என்றும் எடுத்துக் கொள்ளலாமாம்; இது கம்பனால் மட்டுமே முடியும் என்கின்றனர் கவிஞர்கள்;

**

No comments:

Post a Comment