Sunday, March 6, 2016

கந்தரலங்காரம்-103


கந்தரலங்காரம்- அதிகப்பாடல்-103

இராப் பகலற்ற இடங்காட்டி யான் இருந்தே துதிக்கக்
குராப்புனை தண்டை அம் தாள் அருளாய் கரி கூப்பிட்ட நாள்
கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்
பராக்ரம வேல நிருத சங்கார பயங்கரனே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-103)
“இரவும் பகலும் அற்ற இடத்தைக் காட்டி, நான் அங்கிருந்தே துதிக்க, குரா மலரையும், தண்டை அணிகலனையும், உன் பாதங்களில் அணிந்தவனே உன் அருள் தருவாய்! கரி என்னும் யானை (கசேந்திரன் என்னும் யானை முதலை வாயில் சிக்கிக் கொண்ட போது) காப்பாற்றக் கூப்பிட்ட போது, அதன் முன்னால் சென்று முதலையைக் கொன்று யானையைக் காப்பாற்றி, அந்த யானை போற்றி வழிப்பட்டு நின்ற கடவுளே! மெச்சும் பராக்கிரம வேலை உடையவனே! அசுரர்களை சங்காரம் செய்தவனே! அவர்களுக்கு அச்சத்தை விளைவிப்பவனே!”

இராப்பக லற்ற விடங்காட்டி யானிருந் தேதுதிக்கக்
குராப்புனை தண்டையந் தாளருளாய்கரி கூப்பிட்ட நாட்
கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுண்மெச்சும்
பராக்ரம வேல நிருதசங் காரபயங்கரனே.

**

No comments:

Post a Comment