Showing posts with label கந்தரலங்காரம். Show all posts
Showing posts with label கந்தரலங்காரம். Show all posts

Sunday, March 6, 2016

கந்தரலங்காரம்-107


கந்தரலங்காரம்-107 (அதிகப்பாடல்-107)

சூலம் பிடித்து எம பாசம் சுழற்றித் தொடர்ந்து வரும்
காலன் தனக்கு ஒருக்காலும் அஞ்சேன் கடல் மீது எழுந்த
ஆலம் குடித்த பெருமான் குமரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த் துணையே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-107)
“சூலாயுத்தை கையில் வைத்துக் கொண்டு, எமனின் பாசக் கயிற்றை சுழற்றிக் கொண்டு தொடர்ந்து வரும் காலன் (எமனின் தூதன்) என்பவனுக்கு ஒரு காலத்திலும் அஞ்ச மாட்டேன்; கடலில் உண்டாகிய ஆலகால விடத்தை குடித்த பெருமானான சிவனின் குமாரனான ஆறுமுகனின் வேலும், திருக்கரமும் இருக்கிறது! நமக்கு உண்மையான துணையாக!”

சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் றனக்கொரு காலுமஞ்சேன் கடன்மீதெழுந்த
வாலங்குடித்த பெருமான் குமரன றுமுகவன்
வேலுந் திருக்கையு முண்டே நமக்கொரு மெய்த்துணையே.

**

கந்தரலங்காரம் மொத்தம் 100 பாடல்கள் மட்டுமே; கடைசிப் பாடலான 101-வது பாடல் நூற்பயன் பாடல்; மேலும் அதிகமாக, ஆறு பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன; ஆக மொத்தம் 100+1+6 = 107 பாடல்கள் ஆகும்.

(கந்தரலங்காரம் முற்றும்)

கந்தரலங்காரம்-106


கந்தரலங்காரம்-106 (அதிகப்பாடல்-106)

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் என்றன்
உள்ளத் துயரை ஒழித்து அருளா ஒரு கோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-106)
“இருபக்க நெருப்புள்ள கொள்ளிக் கட்டையில் மாட்டிக் கொண்ட எறும்பு போல, கலங்குகிற என் உள்ளத்தின் துயரத்தை நீக்கி அருள் புரிவாய் கந்தா! ஒரு கோடி முத்துக்கள் தெளித்துக் கொழிக்கும் கடலான செந்தில் என்னும் திருச்செந்தூரில் வாழும் சேவகனே! வள்ளிக்கு வாய்த்தவனே! மயில் ஏறிய மாணிக்கமே!”

கொள்ளித் தலையி லெறும்பது போலக் குலையுமென்ற
னுள்ளத்துயரை யொழித் தருளாயொரு கோடி முத்தந்
தெள்ளிக் கொழிக்குங் கடற் செந்தின் மேவிய சேவகனே
வள்ளிக் குவாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.

**

கந்தரலங்காரம்-105


கந்தரலங்காரம்105 (அதிகப்பாடல்-105)

ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து உன் அருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றிலேன் வினை தீர்த்தருளாய்
வாவித் தட வயல் சூழும் திருத்தணி மாமலை வாழ்
சேவற் கொடியுடை யானே அமர சிகாமணியே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-105
“உயிருக்கு மோசம் வரும் காரணமான வினைப் பயனை அறிந்தும், உன் அருள் பாதங்களை வணங்குவதை நினைத்துக் கொண்டே இருக்கிறேன்; எனது வினைப் பயனைத் தீர்த்து அருள் புரிவாய் கந்தா! வாவி என்னும் குளங்களும், வயல்களும் சூழ்ந்துள்ள திருத்தணி மாமலையில் வாழும் சேவல் கொடியை உடைய கந்தா! அமரர் என்னும் தேவர்களின் மணி முடியாகத் திகழ்பவரே!”

ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள்
சேவிக்க வென்று நினைக்கின்றி லேன்வினை தீர்த்தருளாய்
 வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே.

**

கந்தரலங்காரம்-104


கந்தரலங்காரம்- அதிகப்பாடல்-104

செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திருமுகமும்
பங்கே நிரைத்த நல் பன்னிரு தோளும் பதும மலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-104)
“செந்நிறமுடைய, பகைவர்கள் மீது சினமுடைய, வடிவேலும், அழகிய முகங்களும், பக்கங்களில் நிறைத்து நிற்கும் பன்னிரண்டு தோள்களும், பதும மலர் என்னும் தாமரை மலரின் நறுமணம் சொரியும், செங்கோடை என்னும் திருச்செங்கோட்டில் குடிகொண்டிருக்கும் குமரனே! உன்னை எங்கே நினைத்தாலும் அங்கே என் முன்னர் வந்து எதிர் நின்று அருள்புரிகின்றாய்!”

செங்கேழடுத்த சினவடி வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதும மலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ் செங்கோடைக் குமரனென
வெங்கே நினைப்பினு மங்கே யென்முன் வந்தெதிர் நிற்பனே.

**

கந்தரலங்காரம்-103


கந்தரலங்காரம்- அதிகப்பாடல்-103

இராப் பகலற்ற இடங்காட்டி யான் இருந்தே துதிக்கக்
குராப்புனை தண்டை அம் தாள் அருளாய் கரி கூப்பிட்ட நாள்
கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்
பராக்ரம வேல நிருத சங்கார பயங்கரனே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-103)
“இரவும் பகலும் அற்ற இடத்தைக் காட்டி, நான் அங்கிருந்தே துதிக்க, குரா மலரையும், தண்டை அணிகலனையும், உன் பாதங்களில் அணிந்தவனே உன் அருள் தருவாய்! கரி என்னும் யானை (கசேந்திரன் என்னும் யானை முதலை வாயில் சிக்கிக் கொண்ட போது) காப்பாற்றக் கூப்பிட்ட போது, அதன் முன்னால் சென்று முதலையைக் கொன்று யானையைக் காப்பாற்றி, அந்த யானை போற்றி வழிப்பட்டு நின்ற கடவுளே! மெச்சும் பராக்கிரம வேலை உடையவனே! அசுரர்களை சங்காரம் செய்தவனே! அவர்களுக்கு அச்சத்தை விளைவிப்பவனே!”

இராப்பக லற்ற விடங்காட்டி யானிருந் தேதுதிக்கக்
குராப்புனை தண்டையந் தாளருளாய்கரி கூப்பிட்ட நாட்
கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுண்மெச்சும்
பராக்ரம வேல நிருதசங் காரபயங்கரனே.

**

கந்தரலங்காரம்-102


கந்தரலங்காரம் (அதிகப் பாடல்)-102

திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பு ஊடுருவப்
பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டு
மருவடிவு ஆன வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
குருவடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குதிகொண்டவே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-102)
“கந்தனின் திருவடியும், அந்த திருவடியில் அணியும் தண்டையும், அதிலுள்ள சிலம்பும், அந்தச் சிலம்பில் ஒலிக்கும் ஒலியும், மலையை ஊடுருவிப் போய் துளைத்த வேலும், கடம்ப மலர் மாலைகளும், அந்த மாலைகளைத் தாங்கும் விசாலமான பன்னிரண்டு புயங்களும் (தோள்களும்) பொருந்திய மருவடிவான வதனங்கள் என்னும் அந்த ஆறு முகங்களும், அதிலுள்ள மலர் கண்களும், குரு வடிவாக வந்து எழுந்தருளியதால், என் மனம் குளிர்ந்து, குதியாட்டம் போட்டதுவே!”

திருவடியுந் தண்டையுஞ் சிலம்புஞ் சிலம்பூடுருவப்
பொருவடி வேலுங் கடம்புந் தடம்புய மாறிரண்டு
மருவடி வானவ தனங்களாறு மலர்க்கண்களுங்
குருவடி வாய்வந் தெனுள்ளங் குளிரக் குதிகொண்டவே.

**

கந்தரலங்காரம்-101


கந்தரலங்காரம் - நூற்பயன் பாடல்-101

சலம் காணும் வேந்தர் தமக்கும் அஞ்சார் யமன் சண்டைக்கு அஞ்சார்
துலங்கா நரகக்குழி அணுகார் துட்ட நோய் அணுகார்
கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்த நன்னூ
லலங்கார நூற்றுளொரு கவிதான் கற்றறிந்தவரே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-101)
“சினம் காட்டும் வேந்தர்களுக்கும் அஞ்ச மாட்டார்; யமனின் சண்டைக்கும் அஞ்ச மாட்டார்; இருள் சூழ்ந்த நரகம் என்னும் குழியையும் அடைய மாட்டார்; கொடும் நோய்கள் என்னும் துன்பத்தையும் அடைய மாட்டார்; புலிக்கும், கரடிக்கும், யானைக்கும் கலங்க மாட்டார்; கந்தப் பெருமானின் பெருமைகளைக் கூறும் இந்த நூலாகிய கந்தரலங்காரத்தின் நூறு பாடல்களில் ஒரு பாடலையேனும் கற்று அறிந்தவருக்கு!”

சலங்காணும் வேந்தர்தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தநன்னூ
லலங்கார நூற்றுளொரு கவிதான் கற்றறிந்தவரே.
(கந்தரலங்காரம்-101)

**

கந்தரலங்காரம்-100


கந்தரலங்காரம்-100

இடுதலைச் சற்றும் கருதேனைப் போதம் இலேனை அன்பால்
கெடுதல் இலாத் தொண்டரில் கூட்டியவா கிரௌஞ்ச வெற்பை
அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி அற இச்சிறை
விடுதலைப் பட்டது விட்டது பாச வினை விலங்கே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-100)
“வறியவர்களுக்கு ஈவதை சற்றும் நினைத்துப் பார்க்காதவனும், அறிவு இல்லாதவனாகிய என்னை, உன் அன்பால், கெடுதல் இல்லாத உன் தொண்டர்களிடம் சேர்த்துவிட்டு எனக்கு அருள் செய்தாய் கந்தா! கிரௌஞ்ச மலையையே அழித்துச் சாதித்த வேலாயுதனே! எனது பிறவித் துன்பம் அற்றுப் போக, இந்தப் பிறவி என்னும் சிறையிலிருந்து விடுதலை செய்துவிட்டாய்! அதனால், இந்த பாச வினை என்னும் விலங்கு என்னிடமிருந்து விடுபட்டது!”

இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற்
கெடுதலி லாத்தொண்டரிற் கூட்டியவா கிரௌஞ்ச வெற்பை
யடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை
விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே.
(கந்தரலங்காரம்-100)

**

கந்தரலங்காரம்-99



கந்தரலங்காரம்-99

காவிக் கமலக் கழலுடன் சேர்த்து எனைக் காத்தருளாய்
தூவிக் குலமயில் வாகனனே துணை ஏது மின்றித்
தாவிப் படரக் கொழு கொம்பு இலாத் தனிக்கொடி போல்
பாவித் தனி மனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-99)
“சிவந்த கமலம் என்னும் தாமரை மலரின் கழலுடன் கூடிய உன் திருவடியில் என்னைச் சேர்த்து காத்து அருள்வாயாக! தூவி என்னும் இறகுகளுடன் கூடிய குலமயில் வாகனத்தில் செல்வபனே! எனக்குத் துணை ஏதும் இல்லாமல், தாவிப் படருவதற்கு ஒரு கொழு கொம்புகூட இல்லாமல், தனியான கொடி போல, இந்தப் பாவியாகிய நான், தனியாக மனம் தள்ளாடி, வாடி பதைபதைக்கின்றேன்!”

காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்
தூவிக் குலமயில் வாகனனே துணையேது மின்றித்
தாவிப் படரக் கொழுகொம் பிலாத் தனிக்கொடிபோற்
பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே.
(கந்தரலங்காரம்-99)

**

கந்தரலங்காரம்-98


கந்தரலங்காரம்-98

கதிதனை ஒன்றையும் காண்கின்றிலேன் கந்தவேல் முருகா
நதிதனை அன்ன பொய் வாழ்வில் அன்பாய் நரம்பால் பொதிந்த
பொதிதனையும் கொண்டு திண்டாடுமாறு எனைப் போதவிட்ட
விதிதனை நொந்து நொந்து இங்கே என்றன் மனம் வேகின்றதே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-98)
“கதி மோட்சம் அடையும் வழி ஒன்றையும் என்னால் காண முடியவில்லையே கந்தவேல் முருகா! நதி நீரைப் போல ஓடும் இந்த பொய்யான வாழ்வில், அன்புடன், நரம்புகளால் பொதித்து வைக்கப்பட்ட இந்த பொதிமூட்டை என்னும் உடலைச் சுமந்து கொண்டு, நான் திண்டாடுமாறு என்னை போகவிட்டு விட்டாயே! இந்த விதியை நொந்து நொந்து இங்கே எனது மனம் வேகின்றதே!”

கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்கந்த வேன்முருகா
நதிதனை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம்பாற் பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே.
(கந்தரலங்காரம்-98)

**