Tuesday, September 22, 2015

இரகுவம்சம்

இரகுவம்சம்
திலீபனும் அவன் மனைவி சுதக்கிணையும்;
விவச்சுவான் என்னும் ஆதித்தனின் புத்திரன் வைவச்சுதன் என்னும் அரசன்.
அவன் மரபில் வந்தவன் திலீபன் என்னும் அரசன் இருந்தான். இவன் பிறந்ததை, பாற்கடலில் சந்திரன் வந்து உதித்ததைப்போல இருந்ததாம். இவன் மிகப் பெரிய பலசாலியாம். இவனுக்கு மகத மன்னனின் புதல்வியான சுதக்கிணை என்பவள் மனைவியானாள்.

திலீபனுக்கு குழந்தை ஏற்படவில்லை;
திலீபனுக்கும் அவன் மனைவி சுதக்கிணைக்கும் வெகுகாலம் குழந்தை ஏதும் பிறக்கவில்லையாம். இதனால் திலீபன் வருந்தி பெருந்துயர் கொண்டானாம். எனவே அரசாட்சியை அவனின் மந்திரிகளிடம் ஒப்படைத்துவிட்டு காட்டில் இவனின் குலகுருவான வசிட்ட முனிவரிடம் சென்றுள்ளான். அங்கு அவரை வணங்கினான். அவரும் அவனை வரவேற்று உணவளித்து உரையாடினார். 

"உங்கள் அருளால் எனக்கு எந்தக் குறையும் இல்லை; எனக்கு பகையே இல்லை; நாட்டில் பஞ்சம் இல்லை; ஓமகுண்டத்தில் மக்கள் சொரிந்த நெய்தான் மழையாகப் பெய்து, பயிர்கள் வளர்கின்றன; எனவே மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்; இவையெல்லாம் இருந்து, எனக்கு மட்டும் புத்திர பாக்கியம் இல்லை; எனக்கு புத்திரர் இல்லை என்பதால், உலகம் என்னை இகழ்வாகப் பார்க்கிறது; எனக்கு பின்னர் எனக்கு பிண்டம் கொடுக்க மகன் இல்லை; என் பிதிரர் நான் கொடுக்கும் பிண்டத்தையும் நன்றாக உண்ண மறுக்கின்றனர்; நான் கொடுக்கும் தருப்பண நீரையும் இனிக் கொடுக்க ஆளில்லையே என்று அவர் வருந்தி, அவர்கள் விடும் பெருமூச்சால் அதிகம் சூடாகி விடுகிறது, அதையே அவர்களும் அருந்துவர்; தவமும் தானமும் என்று சொல்வதுபோல, இம்மை சுகம் மறுமை சுகம் என்னும் இரண்டையும் ஒருங்கு கொடுக்கும் புத்திரப்பேர் இல்லாத என்னை உங்கள் முன்னே, காயாமரம் போல நிற்கிறேன். எனவே என்னை இந்த பிதிரர் கடனில் இருந்து எப்படியாவது என்னை நீக்கி அருள் புரியவேண்டும்" என்று குருவிடம் கேட்கிறான். 

வசிட்டர்:
"அரசனே! நீ முன்னர் ஒரு நாள், தேவலோகம் போய் இந்திரனைக் கண்டு திரும்பி வரும் வழியில் கற்பக மர நிழலில் காமதேனு படுத்திருந்தது. நீ, அதை வணங்காமல் மனைவியின் ருதுகாலத்தையும் புத்திர உற்பத்தியையும் நினைவிற்கொண்டு விரைவில் வந்தாய்; அதனால் அந்த காமதேனு கோபம் கொண்டு "சந்ததியை நினைத்து, என்னை வணங்காமல் செல்கிறாயா; அரசனே! என்னுடைய சந்ததியை வணங்காமல் உனக்கு சந்ததி கிடைக்காது" என்று சாபம் இட்டது. 

வணங்க வேண்டியவர்களை வணங்காமல் வந்தால் இப்படியான நிந்தனைகளால் தடை ஏற்படும்.

No comments:

Post a Comment