Thursday, September 24, 2015

நந்தினி பசுவைப் பார்க்கிறான்


அரசனே திலீபா! உனக்குத்தான், அழகிய சரீரம், இளமை, அரசியல் முதலிய சிறப்புகள் எல்லாம் உள்ளன. நீ இறந்து விட்டால், இந்த நந்தினி என்னும் பசு மட்டும்தான் உயிர் பெற்று எழும்; ஆனால், உன்னை நம்பியுள்ள மக்கள் எல்லோரும் கவலைக் கடலில் மூழ்கி வருந்துவர். எனவே நீ இறக்க வேண்டாம். இந்த பசுவே இறந்துவிட்டுப் போகட்டும். நீ உன் மக்களைக் காப்பாற்ற உயிருடன் இருந்தாக வேண்டும்; உன்னால் இந்தப் பசுவைக் காப்பாற்ற முடியவில்லை என்று உன் குரு வசிட்டரிடம் சொல்லிவிடு; உன்னிடம்தான் ஆயிரக்கணக்கில் பசுக்கள் உள்ளனவே! அதில் ஏதாவது ஒன்றை உன் குருவுக்கு பால் கொடுக்கும் பசுவாகக் கொடுத்துவிடு. அவருக்கும் உன்மீது கோபம் வராது.
"சிங்கமே, நான் ஒரு சத்திரியன். சத்திரியன் என்றால் சதத்தினின்று காப்பவன் என்று பொருள். சத்திரியனாக நடவாத அரசனின் அரசியல் பயன்தராது. கோடி பசுக்கள் கொடுத்தாலும் என் குரு வசிட்டருக்கு கோபம் தணியாது. நீ நினைப்பதுபோல, இந்தப் பசு சாதாரண பசு அல்ல; காமதேனுவின் கன்று; எனவே என் உயிரைக் கொடுத்தாவது இந்தப் பசுவை மீட்பேன். இது ஆசிரமத்துக்கு திரும்பிச் செல்லவில்லை என்றால், அதன் கன்று, தன் தாயைக்  காணாமல் வருந்தும். என் குருவின் யாகமும் பால் இல்லாமல் வழுவும். இதை காக்கும்படி என்னிடம் ஒப்படைத்த என் குரு முன்னால், இந்தப் பசு இல்லாமல் எப்படிப் போய் நிற்பேன். என் உடம்பு அழிந்தால் என்ன. இந்த உடம்பு, மண், நீர், முதலிய பஞ்சபூதங்களைக் கொண்ட மாய உடம்புதான். இது போலிதான். இதன்மேல் எனக்கு விரும்பம் இல்லை. மேலும், இவ்வளவு நேரம் நாம் பேசிக் கொண்டிருப்பதால், நாம் இருவரும் நண்பர்கள் ஆகி விட்டோம். எனவே நண்பனின் வார்த்தையை நீ மீறக்கூடாது என்று கெஞ்சினான்.
சிங்கமும், சரி என்று சொல்லிவிட்டது. உடனே அது நந்தினி பசுவை விட்டுவிட்டது. பசு எழுந்தவுடன், திலீபன் மன்னன் கீழே விழுந்து மாண்டான்.
இதை மேலிருந்து பார்த்த வித்தியாதரர்கள் மலர் மாரி பொழிந்து, "மகனே நீ எழுந்திரு" என்று அருளினர். அரசனும் உயிருடன் எழுந்து விட்டான்.
அரசன் திலீபன், நந்தினி பசுவைப் பார்க்கிறான்.
நந்தினி அரசனிடம் பேசுகிறது;
"இந்த மாயமெல்லாம் நானே செய்தேன்; வசிட்டர் மகிமையால் யாரும் என்னை நெருங்கி விட முடியாது. அரசனே நீ குருவின் மீது வைத்திருக்கும் பக்தியும், என்னிடம் வைத்திருக்கும் அன்பும் என்னை மகிழ்விக்கின்றன. நீ என்ன விரும்புகிறாய் என்று என்னிடம் கேள். நான் பால் மட்டும் கொடுக்கும் பசு என்று எண்ணிவிடாதே. விரும்பிய பொருள்களை எல்லாம் கொடுப்பேன். எனக்கு காமதேனு என்று பெயருண்டு." (காமம் என்றால் விருப்பம்; தேனு என்றால் கொடுப்பது);
"தாயே! என் குலம் விளங்க எனக்கு ஒரு புத்திரர் வேண்டும்; அந்தப் புத்திரர் என் மனைவி சுதக்கிணையிடம் தோன்ற வரம் தர வேண்டும்."
"அவ்வாறே வரம் தந்தேன்; என் பாலை, ஒரு தொன்னையில் கறந்து நீ குடிக்க வேண்டும்."
"உன் கன்றும் குடித்து, என் குருவின் யாகத்துக்கும் உபயோகமாகி, மீதம் உள்ள பாலை நான் குடிக்க விரும்புகிறேன்"
இருவரும் ஆசிரமம் திரும்புகின்றனர்.
அவ்வாறே அங்கு பாலைக் குடித்து மனைவியுடன் உறங்கி, காலையில் குருவின் அருள் பெற்று, நந்தினியையும் வணங்கி நாடு திரும்புகிறான்.
.... தொடரும். ....


No comments:

Post a Comment