கௌபீனம்
சிவபெருமான், ஒரு சிவபக்தனைச் சோதித்த கதை. கோவணத்தை வைத்தே அவருக்கு
சோதனை வைக்கிறார். சிவபெருமான், ஒரு முனிவர் போல வேடமணிந்து வருகிறார். பொதுவாக
முனிவர்களிடம் இருக்கும் சொத்தே கௌபீணம் (கோவணம்) மட்டுமே! அந்த முனிவர் கையில்
ஒரு கோவணத்துடன் வந்து, ஒரு சிவபக்தனான, அமர்நீதி நாயனார் என்பவரை வந்து
பார்க்கிறார். முனிவர், “நான் வெளியூர் போகிறேன். அதுவரை என் கோவணத்தை பாதுகாப்பாக
வைத்திருங்கள். நான் ஊரிலிருந்து திரும்பி வந்தவுடன் வந்து வாங்கிக் கொள்கிறேன்.
இது ஒன்றுதான் என்னிடம் உள்ளது. அதை பத்திரமாகப் பாதுகாக்கவும்” என்று கூறுகிறார்.
சிவ பக்தன், முனிவனின் சொல்லைத் தட்டாமல், அதை பாதுகாத்து வருகிறார்.
ஆனாலும், அந்த கோவணம் எப்படியோ காணமல் போய்விடுகிறது. இதற்கிடையில்,
ஊருக்குப் போன முனிவரும் வந்துவிடுகிறார். அவரின் கோவணத்தை கேட்கிறார். சிவபக்தன்
அமர்நீதி நாயனார் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“முனிவரே! உங்களின் கோவணம் காணாமல் போய்விட்டது. மன்னித்து விடுங்கள்.
அதற்குப் பதிலாக நீர் என்ன கேட்டாலும் நான் தருகிறேன்” என்று கெஞ்சுகிறார்.
முனிவரோ, “சிவபக்தா! என்னிடம் இன்னொரு கோவணம் இருக்கிறது. அதன் எடைக்கு
ஏதாவது பொருள் கொடு” என்று கேட்கிறார்.
சிவபக்தனும் சரி என்று முனிவரின் கோவணத்தை ஒரு தராசில் வைத்து, அதற்கு
இணையான பொருள்களை எல்லாம் வைக்கிறார். தராசு எடை காட்ட மறுக்கிறது. கோவணம் என்ன
அவ்வளவு எடை அதிகமாகவா இருக்கும்? ஆச்சரியம்.
வேறு வழியின்றி, அவர் வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் அந்த தராசில்
வைக்கிறார். போதுமானதாக இல்லை. வேறு வழியின்றி, தான் ஏறி உட்காருகிறார். தன் மனை
மக்களை எல்லாம் ஏறி உட்காரச் சொல்கிறார். ஒரு வழியாக தராசு சமன் நிலைக்கு
வருகிறது.
அதன்படி, இப்போது மொத்த பொருள்களும், இவரும், அவர் மனைவி மக்கள்
அனைவரும் இனி முனிவருக்கே சொந்தம்!
ஒப்புக்கொள்கிறார் சிவபக்தன்.
அவரின் சிவபக்தியையும் நேர்மையையும் மெச்சி, சிவன் தன் பாதங்களில்
சேர்த்துக் கொள்கிறார்.
**
**
No comments:
Post a Comment