Tuesday, July 19, 2016

அபிராமி அந்தாதி (காப்புப் பாடல்)

அபிராமி அந்தாதி (காப்புப் பாடல்)
(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)
காப்பு
தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும், தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே.
தெளிவுரை:
கொன்றை மாலையையும் சண்பக மாலையையும் அணிந்து தில்லையம்பதியாம் சிதம்பரத்தின் நாயகர் நடராசருக்கும் அவரது ஒரு பாதியாக இடப்பாகத்தில் எப்பொழுதும் வீற்றிருக்கும் உமையவளுக்கும் உதித்த மைந்தனே! மேகம் போன்ற கருநிறமுடைய கணபதியே! ஏழு உலகங்களையும் பெற்ற சிறந்த அபிராமித் தாயின் அருளையும் அழகையும் எடுத்துக் கூறி அணிவிக்கும் இந்த அந்தாதி மாலையானது எப்பொழுதும் என் சிந்தையுள்ளே இருக்கும்படி அருள் புரிவாயாக!

(தார்=பூமாலை;
கார்=மேகம்;
சீர்=சிறந்த)
(நன்றி; திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமான "அபிராமி அந்தாதி தெளிவுரை" என்ற நூலிலிருந்து)

அன்னை அபிராமி

அன்னை அபிராமி


ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் வழிகாட்டி அன்னை அபிராமி ஆவாள்; ராமி என்றால் அழகுடையவள்; அபிராமி என்றால் பேரழகு உடையவள்; பிரணவத்தில் உகரம் என்ற எழுத்து அபிராமிக்கு உரியது; அந்த எழுத்தைக் கொண்டு அபிராமி பட்டர் “உதிக்கின்ற” என்று தொடங்கி, “உதிக்கின்றவே” என்று 100வது பாடலில் பூர்த்தி செய்கிறார்; அபிராமியை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் எப்பொழுதும் உதயமே என்று சொல்கிறார்;


அம்மனின் திருவடித் தாமரைகளைப் போற்றி வணங்கினால் எந்தவிதமான தீங்கும் நேராது என அபிராமி பட்டர் கூற்று; அதற்காக அபிராமி அந்தாதி பாடல்களில் மூன்றில் ஒரு பங்கு பாடல்களான 33 பாடல்களில் அம்மனின் தாமரை போன்ற திருவடிகளைப் போற்றிப் பாடியுள்ளார்;
அம்பிகையின் பக்தரான மன்மதனை, சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணால் எரித்த பொழுது அவனிடம் உள்ள கரும்பு வில்லையும் மலர்க்கணைகளையும் அம்பிகைக்கு காணிக்கையாக கொடுத்தான்; அதையும் அபிராமி பட்டர் தனது அபிராமி அந்தாதியில் 13 பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்;
சிவனின் இடப்பாகத்தில் அபிராமி அமர்ந்த பெருமையைப் போற்றி 15 பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்;
(நன்றி: திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமான “அபிராமி அந்தாதி தெளிவுரை” என்ற நூலிலிருந்து)
** ** **

Sunday, July 17, 2016

திருவாசகம்

திருவாசகம்:

முன்னின்று ஆண்டாய் எனும் முன்னம்
யானும் அதுவே முயல்வுற்றுப்
பின் நின்று ஏவல் செய்கின்றேன்
பிற்பட்டொழிந்தேன் பெம்மானே
என்னின்றருளி வரநின்று போந்திடு
என்னாவிடில் அடியார்
உன்னின்று இவனார் என்னாரோ
பொன்னம்பலக்கூத்து உகந்தானே!
**
என் முன்னர் தோன்றி, நீயே என்னை ஆட்கொண்டாய்! அதன்படி உன்னையே பின்பற்றி உனக்கு ஏவல் செய்கின்றேன்! அதில் என்னையே இழந்து விட்டேன்! நீ, என் முன் நின்று அருளி, ‘என்னிடம் வா’ என்று நீ அழைக்காவிட்டால், உன் அடியவர்கள் ‘இவன் யார்’ என்று கேட்டு என்னை ஒதுக்கி விட மாட்டார்களா, பொன்னம்பலத்தில் கூத்தாடிய பெருமானே!
**

Tuesday, July 12, 2016

முடிவு இல் இன்பத்து...

"முடிவிலின்பத்து மூவாமுதல்வனைப் போற்றிசெய்தே
அடிதொறுமிரண்டுமொன்று மாதியிற்பொருளடக்கி
நடைபெறுக்கரமாதினகரவீறெதுகையாகப் 
படியிரோர் சொற்பொருட்பல்விதத் தொகைபகரலுற்றாம்."

முடிவு இல் இன்பத்து = முடிவு இல்லாத அளவில்லா இன்பத்தை உடைய;

மூவா முதல்வனைப் போற்றி செய்து = மூத்த முதல்வனான அருகக்கடவுளைப் போற்றித் துதித்து;

அடிதொறும் இரண்டும் ஒன்றும் = பாடலின் அடிகள் தோறும் இரண்டு சொல்லினும், ஒரு சொல்லினும்;

ஆதியிற் பொருள்கள் அடக்கி = முதலில் அதன் பொருள்களை அமைத்து;

நடைபெறு ககரபம் ஆதி னகரம் ஈறு எதுகையாக = நடைபெற்றுவரும் ககர எதுகை முதல் னகர எதுகை வரை;

கடியில் ஓர் சொற் பல் விதப் பொருள் தொகை  ஓர் சொல் பலவிதப் பொருள்கள் என;

பகரலுற்றாம் = சொல்லல் உற்றாம்;



Tuesday, June 28, 2016

பத்தினி சாபம்!

பத்தினி சாபம்!
கௌசிகன் என்பவன் பெண் பித்தன் போல! இதனால் இவனுக்கு குஷ்ட நோய் வந்துவிட்டது; அப்போதும் அவன் மனைவி அவனுக்கு உரிய பணிவிடைகளைச் செய்து வந்து அவனுடனேயே வசித்து வருகிறாள்; கௌசிகனுக்கு ஒரு அழகிய வேசி மீது காமம் வந்தது; அதைத் தன் மனைவியிடமே கூறுகிறான்; அவளும், தன் கணவனின் ஆசையை நிறைவேற்ற நினைத்து, குஷ்ட நோயுடன், நீர்வடியும் உடம்புடன் இருக்கும் தன் கணவனை, தன் முதுகில் சுமந்து கொண்டு, அர்த்த ராத்திரியில் அந்த வேசி வீட்டுக்கு புறப்படுகிறாள்

வழியில் காட்டுப் பாதை; ஒரே இருட்டு; அந்தகாரம் என்னும் அளவுக்கு இருட்டு; கண் தெரியாத வழிபாதை; அந்த காட்டு வழியில்தான் மாண்டவியர் முனிவர் தவம் செய்து கொண்டிருக்கிறார்; இருட்டில் தெரியவில்லை; இவள் முதுகில் தூக்கிச் செல்லும் இவள் கணவனின் காலானது அந்த முனிவரின் தலையில் தட்டிவிடுகிறது; முனிவருக்குக் கோபம்; இந்த இரவில் எவன் தன்னை தலையில் உதைப்பது என்று தெரியும் முன்னரே சாபத்தை அள்ளி விடுகறார்; என் தலையை எவன் இடித்தானோ அவன் இன்று விடிவதற்குள் இறக்கக் கடவது! இடித்தவன் கேட்கட்டும் என சத்தமாகச் சொல்கிறார்;

இதை அவளும் கேட்கிறாள்; கணவனும் கேட்கிறான்; கணவனுக்கு பயம்! மனைவியோ, "என் பத்தினித் தன்மை உண்மையானால், நான் பதிவிரதையானால், இந்த இரவு விடியாமலேயே போகட்டும்" என்று மறு சாபம் இடுகிறாள்; பத்தினியின் சாபம் பொல்லததுதான்! முனிவர் சாபத்தையும் தாண்டி வீரியம் மிக்கது; பொழுது விடியவே இல்லை!

பொழுது விடியாத உலகத்தை எப்படி பார்ப்பது! எல்லோரும் விஷ்ணுவைத் தேடிப் போகிறார்கள்; விஷ்ணுவோ, "இதற்கு முடிவை அநசூயையிடம் கேளுங்கள் என்று அனுப்பி விடுகிறார்; அநுசூசை என்ற பெண், அத்திரி முனியின் மனைவி; மகா பத்தினி; எல்லோரும் அநசூசையிடம் போய் மண்டியிடுகிறார்கள்; அவள், கௌசிகன் என்னும் அந்த குஷ்டரோகியின் வீட்டுக்கே போகிறார்கள்; அங்கு அவன் மனைவி அநசூசை இருக்கிறாள்; அவன் மனைவியைச் சந்தித்து பாம விமோசனம் செய்து பொழுது புலரச் செய்ய வேண்டும் என கேட்கிறார்கள்; அவளோ மறுக்கிறாள்; பொழுது விடிந்தால், என் கணவர் இறந்துவிடுவாரே! என்கிறாள்; அவள் வீட்டுக்கு வந்தவர்களில் தேவர்களும் இருக்கிறார்கள்;

"அநசூசை என்னும் மகா பத்தினியே! மகளே!! கலங்காதே!!! உன் கணவர் இறக்க மாட்டார்; நாங்கள் உறுதி அளிக்கிறோம்; அவனுக்கு உள்ள இந்த குஷ்டநோய் நீங்கி, மிகவும் அழகானவனாக உன் கணவன் மறுபடியும் தோன்றுவான்" என்று உறுதி அளிக்கிறார்கள்;

அதை ஒப்புக் கொண்ட அவளும் பொழுது புலர அனுமதி அளிக்கிறாள்; பொழுது புலர்ந்து சூரியனும் வெளி வருகிறான்!

பழைய உருவத்தில் இருந்த கணவனும் இறந்து, மறைந்து புதிய அழகுள்ள கணவனாக காட்சி அளிக்கிறான்;



காக்க காக்க கனவகவேல் காக்க

கந்தர் சஷ்டி கவசம்

காக்க காக்க கனவகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்கத் தாக்க தடையறத் தாக்க
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புறக்கடை முனியும்
கொள்ளிவாயப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியேனை கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியங்காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்ட முடி மண்டையும்
பாவைகளுடனே பல கலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதுமஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட.........


Saturday, June 4, 2016

நாராயணன்

நாராயணன்
விஷ்ணு; நாரம் என்றால் ஜலம் (நீர்) என்று பொருள்; நீரில் பிறந்ததால் நாராயணன் எனப் பெயர்; மகா பிரளயத்தில் எல்லாமே அப்பு ரூபமாய் ஒடுங்கியதாம்; அப்பு = நீர்; அப்போது அதில் விஷ்ணு தோன்றி உலகம் அனைத்தையும் தோற்றுவித்தார் என்று வேதபுராணங்கள் சொல்கின்றன;
நாராயணன் என்ற வார்த்தையை விஷ்ணுவுக்கு மாத்திரமல்ல, சிவனுக்கும் சொல்வார்களாம்!
இந்த ஜகம் என்னும் பிரபஞ்ச உலகம் அப்புவில் ஒடுங்கிய காலத்திலே அதை மீண்டும் அதை பிரபஞ்சமாக தோற்றுவித்த பரப்பிரமத்தின் புருஷ அம்சமே நாராயணன் என்று சொல்கிறார்கள்; நாராயணன் என்பது அப்புவின் (நீரின்) மூலப்பகுதி; அது மண்டலத்திலிருந்து எழுந்து ஆடும் சர்ப்ப வடிவினை உடையதாய் இருக்கும்; அதன் சக்தி பாகம் சங்கின் வடிவமாய் இருக்கும்; அப்புவிடம் விளங்கும் புருஷ அம்சம் ஆதிசேஷன் என்னும் சர்ப்பத்தை படுக்கையாகக் கொண்டு அதில் துயில் செய்யும் நாராயணன் என்று கூறப்படும்; ஒடுங்காது எஞ்சி நின்று, மீளவும் சகத்துக்கு ஆதி காரணமாக கிடந்தது அப்புவின் மூலப்ப்பகுதியான இது என்பதால் இதை ஆதிசேஷன் என்பர்; சேஷம் = எஞ்சியது; அப்புவின் மூலப்பகுதி மண்டலமிட்டு எழுந்து ஆடும் சர்ப்ப வடிவு என்பது அப்புவின் அணுவை எடுத்துச் சோதித்தால் இது புலனாகும் என்கிறார்கள்; அந்த அணுவானது ஸ்தூல நிலை விட்டு சூக்குமித்து சூக்குமித்துப் போய் ஏழாவது நிலையை அடையும் நேரத்தில் இந்த நிலையைப் பெறுமாம்; அதற்கு கீழே உள்ள ஆறாவது நிலையில் கமலவடிவம் பெறும்; கமல வடிவுடைய அப்புவிடம் பிரமாவாகிய சிருஷ்டி புருஷன் தோன்றுவான்; அப்புவின் மூலப்பகுதியை ஆதிசேஷன் என்றும், அப்புவுக்கு குறி கமலம் என்றும் கூறியது நமது பூர்வ வேதாந்த சித்தாந்த நூல் ஆசிரியர்கள் பூத பௌதீக ஞானமும், நுண்மையும் அநுபவமும் பெரிதும் பாராட்டத்தக்கது என்று இக்கால ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்;

*

Thursday, June 2, 2016

எந்தனை ஆளும் ஏரகச் செல்வ!

கந்தர் சஷ்டி கவசம்
(செந்தில் மேவும் சரவணன்)

எந்தனை ஆளும் ஏரகச் செல்வ!
மைந்தன் வேண்டும் வர மகிழ்ந்து உதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதமென்று
உன் திருவடியை உறுதி என்று எண்ணும்
என் தலை வைத்து உன் இணையடி காக்க
என்னுயிர்க்கு உயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திரு பல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என் இளம் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழு பதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கை இரண்டும் முரண் வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீங்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க.....


நளன்-தமயந்தி

நிஷத தேசத்தின் மன்னர் வீரசேனன்; இந்த மன்னர் வீரசேனனின் மகனே நளன்; நளனின் மனைவி தமயந்தி; இவர்களின் மகன் இந்திரசேனன்: மகள் இந்திரசேனை;
மன்னர் நளன், கொடையிலும், கல்வியிலும், அழகிலும், ஆண்மையிலும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மன்னர்;
இவன் கீர்த்தி எல்லா நாடுகளுக்கும் பரவியது; அதை ஒரு அன்னப்பறவை வேறு நாட்டில் உள்ள தமயந்திக்கு. நளனின் சிறப்புகளைச் சொல்கிறது.
தமயந்திக்கு சுயம்வரம் நடக்கிறது; அங்கு எல்லா நாட்டு மன்னர்களும் வந்திருக்கிறார்கள்; இந்திரனும் வந்திருக்கிறான்; ஆனால், தமயந்தி, நளன் எங்கிருக்கிறான் என்று கண்டு, அவனுக்கே மலை இட்டு மணந்து கொள்கிறாள்;
ஆனால் விதி வலியது;
கலி புருஷனுக்கு இவர்களின் சந்தோஷ வாழ்க்கை பொறாமையை உண்டு பண்ணியதாம்; எனவே, கலி, வேறு ஒரு மன்னனான புஷ்கரன் என்னும் மன்னனை ஏவி விடுகிறான்; நளனுடன் நீ சூதாடு; அவனை உன்னால் வெல்ல முடியும்; அதற்குறிய உதவியை நான் செய்கிறேன் என்று கலி கூறி தைரியம் ஊட்டியது; அவனும் நளன் மன்னருடன் சூது விளையாடுகிறான்; அந்தச் சூதில் நளன் தோற்றுவிடுகிறான்; நளன், தன் மொத்த நாட்டையும் சூதில் இழக்கிறான்; அவனும் அவன் மனைவி தமயந்தியும் உடுத்திய ஆடையுடன் காட்டுக்குப் போகிறான்; கல்லும் முள்ளும், வெயிலும் வருத்த வாழ்கிறார்கள்; அவள் படும் துன்பத்தை பொறுக்க முடியாமல், இவளை விட்டு விலகி விட்டால், அவள் தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று வாழலாமே என்று எண்ணுகிறான்; நான் மட்டுமே காட்டில் வாழ வேண்டும்; இவள் ஏன் இந்தத் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என நினைத்து, ஒருநாள் இரவில் அவளை விட்டுச் சென்று விடுகிறான்;
அவள் எழுந்து பார்க்கிறாள்; கணவரைக் காணவில்லை; எங்கு தேடியும் பார்க்க முடியவில்லை; ஒருவழியாக, அவள் தன் பெற்றோர் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடுகிறாள்;
பின்னர், நளன், தன் ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்றான்;
இந்தக் கதையை விரித்துச் சொல்லும் நூல் தான் "நைஷதம்".
இதை தமிழில் இதே பெயரில் சொல்லி உள்ளனர்.


நவராத்திரி

நவராத்திரி

இந்த நவராத்திரி பூஜைகளைச் செய்தால், ஒருவர் தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாமாம்.

இந்த நவராத்திரி, ஆஸ்வயுஜ மாதத்தில் (ஐப்பசி மாதத்தில்) சுக்கில பிரதமை முதல் ஒன்பது ராத்திரிகள்தான் நவராத்திரி ஆகும்.

கிருத யுகத்தில் ஒரு அரசன் இருந்தான்; அவன் பெயர் சுகேதன்; அவன் தன் இராஜ்ஜியத்தை இழந்தான்; மனைவியை கூட்டிக் கொண்டு காட்டுக்குப் போகும்படி ஆகி விட்டது; காட்டில் வாழ்கிறான்;

அந்தக் காட்டில், ஒரு முனிவர் இருக்கிறார்; அவர் பெயர் ஆங்கிரசன்; அவரை, இந்த மன்னன் சென்று பார்க்கிறான்; அந்த ரிஷி, இந்த மன்னனுக்கு, ஒரு பூஜைமுறையைச் சொல்லிக் கொடுக்கிறார்; அதைச் செய்தால், நீ இழந்தவற்றை எல்லாம் திரும்பப் பெறலாம் என்றும் சொல்கிறார்;

அதுவே நவராத்திரி பூஜை; அதை செய்துவருகிறான்; இழந்த நாடு நகரங்களை எல்லாம் திரும்பப் பெற்றான்;

நாட்டுக்கு வந்தபின்னரும் அந்த பூஜையைத் தொடர்ந்து செய்து வந்தான்; அது முதல், எல்லோரும் இந்த பூஜையைச் செய்ய ஆரம்பித்தனராம்;

துர்க்கை, லக்ஷூமி, சரஸ்வதி இம்மூவரையும் முறையே ஒவ்வொருவருக்கும் மூன்று நாட்கள் வீதம் ஒன்பது நாட்கள் பூசித்து வர வேண்டுமாம்; ஒன்பாதம் நாள் ஆயுதங்களையும் புத்தகங்களையும் வைத்து ஆராதித்து வருவர்;

மறுநாள் பத்தாம் நாளே தசமி திதி; இதையே விஜய தசமி என்பர்; வெற்றி கிடைக்கும் நாள்!



கணபதி மந்த்ரம்

கணபதி மந்த்ரம்

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவீம் கவீனா முபமஸ்ர வஸ்தமம்.
ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம்
ப்ரம்மணஸ்பத ஆ ந:
ஸ்ருண்வன்னூதிபிஸ்ஸீத ஸாதனம்.
(யஜூர் வேதம் 4.5)


“தேவர் கூட்டத்திற்குத் தலைவர் ஆதலால் கணபதி என்று பெயர் பெற்றவரே உம்மைப் போற்றி அழைக்கிறோம்! நீர் அறிஞர்களுள் பேரறிஞர்! ஒப்பற்ற புகழ்படைத்தவர்! முதன்மையானவர்களுள் தலைசிறந்தவர்! வேதங்களுக்கு நாயகர்! எங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டு எங்களைக் காப்பதற்கு விரைந்து வந்தருள்வீராக!

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்

கந்தர் சஷ்டி கவசம்
(செந்தில் மேவும் சரவணன்)
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்து அழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்த
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகு உடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற் சீராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாளும்
திருவடி அதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு......

Tuesday, May 31, 2016

சரவண பவனார் சடுதியில் வருக

கந்தர் சஷ்டி கவசம்
(செந்தில் மேவும் சரவணன்)

சரவண பவனார் சடுதியில் வருக
சரவண பவச ரரரர ரரர
ரிவண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீரா நமோ நம
நிபவ சரவண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டு ஆயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும
உய்யொளி சௌவும் உயிர் அரையும் கிலியும்
கிலியும் சௌவும் கிளர் ஒளியையும்
நிலை பெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி ஒவ்வும்
குண்டலியாம் சிவ குகன் தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்...

Monday, May 30, 2016

சஷ்டியை நோக்க சரவண பவனார்

கந்தர் சஷ்டி கவசம்
(செந்தில் மேவும் சரவணன்)

சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்யர்க்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட
மையல் நடம் செயும் மயில் வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்க என்று வந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

Friday, May 27, 2016

சிவதருமோத்தரம்

சிவதருமோத்தரம்

மறைஞானசம்மந்தர் "சிவதருமோத்தரம்" என்ற நூலைச் செய்தார். இது மொத்தம் 12 இயல்புகளைக் கொண்டது.
அவை:

பரமதருமாத இயல்
சிவஞானதான இயல்
ஐவகை யாக இயல்
பலவசிட்டகாரண இயல்
சிவதரும இயல்
பாவ இயல்
சுவர்க்க நரக இயல்
சனன மரண இயல்
சுவர்க்க நரக சேட இயல்
ஞான யோக இயல்
பரிகார இயல்
கோபுர இயல் 

சிருஷ்டி ஆதி பத்தியம்

சிருஷ்டி ஆதி பத்தியம்

பூமிக்கு பிருது சக்கரவர்த்தியும்,
யாகம், விரதம், நட்சத்திரங்களுக்கு சந்திரனும்,
ஜலத்துக்கு வருணனும்,
தனத்துக்கும், யட்சகர்களுக்கும் குபேரனும்,
துவாதசாதித்தியர்களுக்கு விஷ்ணுவும்,
வசுக்களுக்கு அக்கினியும்,
பிரஜாபதிகளுக்கு தட்சனும்,
தேவர்களுக்கு இந்திரனும்,
தைத்தியர், தானவர்களுக்கு பிரஹலாதனும்,
பிதிர்களுக்கு யமனும்,
பசுபூதாதிகளுக்கு சிவனும்,
மலைகளுக்கு இமயமும்,
நதிகளுக்கு சமுத்திரமும்,
கந்தருவ வித்தியாதர கிந்நர கிம்புருஷர்களுக்கு சித்திர ரதனும்,
சர்ப்பங்களுக்கு வாசுகியும்,
திக்கஜங்களுக்கு ஐராவதமும்,
பட்சிகளுக்கு கருடனும்,
குதிரைகளுக்கு உச்சைசிரவமும்,
மிருகங்களுக்கு சிங்கமும்,
இவர்களே பிரபஞ்ச சிருஷ்டி காலத்தில் ஆதி பத்தியம் பெற்றவர்கள்.