Saturday, July 23, 2016

அபிராமி அந்தாதி பாடல்-1

அபிராமி அந்தாதி 1-ம் பாடல்

(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)

(ஞானமும் வித்தையும் பெற)

உதிக்கின்ற செங்கதிர்! உச்சித்திலகம்! உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம்! மாதுளம் போது! மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி! மென்கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி! அபிராமி என்தன் விழுத்துணையே.

தெளிவுரை
அதிகாலையில் தோன்றுகின்ற சிவந்த கதிர்களை உடைய உதயசூரியன், பெண்கள் தங்களுடைய நெற்றியின் உச்சியில் அணியும் செந்தூர குங்குமத் திலகம், ஞானியர்கள் மதிக்கக் கூடிய மாணிக்கம், மாதுளம் மலர், தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் வழிபடுகின்ற மின்னற் கொடி, மென்மையான மணம் கமழ்கின்ற குங்குமக் குழம்பு போன்ற சிறந்த திருமேனியை உடைய அபிராமித் தாயார் எனக்கு என்றும் சிறந்த துணையாக இருந்திடுவாள்!

(உணர்வுடையோர்=ஞானியர்; மென்கடி=மென்மையான நறுமணம்)


(நன்றி: திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமானஅபிராமி அந்தாதி தெளிவுரை” என்ற நூலிலிருந்து) 

No comments:

Post a Comment