Wednesday, October 28, 2015

திருவிளையாடல்--17

திருவிளையாடல்--17
சிவபெருமான் மதுரையில் நடத்திய விளையாடல்களே திருவிளையாடல் எனப்படும்.
(அபிஷேக பாண்டியனுக்கு முடிசூட்டும் விழா நடத்த மணி முடி இல்லாமல் தவித்த மந்திரிகளுக்கு, சிவன் வணிகனாக வேடமிட்டு அந்த மணிமுடியை வைத்திருந்த பெண்களிடமிருந்து அதைப் பெற்றுத்தந்த தந்த கதை).
சோமசுந்தர பாண்டியன் என்னும் பெயருடன் சிவபெருமான், தடாதகை பிராட்டியை திருமணம் செய்து, அவர் வயிற்றில் உக்கிரவர்மன் என்னும் குமாரனை பெற்றெடுத்தார்.
இந்த உக்கிரவர்ம பாண்டியன், சோமசேகரன் என்பவரின் புதல்வியான காந்திமதியை திருமணம் புரிந்து கொண்டார்.
இந்த உக்கிர வரம் பாண்டியனுக்கும், அவன் மனைவி காந்திமதிக்கும் பிறந்த புதல்வனே "வீரபாண்டியன்."
இந்த வீரபாண்டியன், காட்டிற்கு வேட்டைக்குப் போவது வழக்கம். அப்படி போகும்போது ஒரு முறை, வேங்கை இந்த வீரபாண்டியனை தாக்கியது. அதில் காயம் அடைந்து, வீரபாண்டியன் இறக்கிறான்.
இறந்த வீரபாண்டியனுக்கு, "அபிஷேக பாண்டியன்" என்னும் ஒரு மகன் இருக்கிறான்.
வீரபாண்டியன் இறந்தவுடன், அவனின் மகன் அபிஷேக பாண்டியனுக்கு பாண்டிய நாட்டின் மன்னனாக முடி சூட்ட ஏற்பாடுகள் மதுரையில் நடக்கிறது.
முடி சூட்டும் முகூர்த்த நேரம் வந்துவிட்டது. மந்திரிகள் புடைசூழ, மக்கள் கூடிவிட்டனர். அப்போது மந்திரிகள், அரசனின் முடி-கிரீடத்தை பார்க்கிறார்கள். அது இருந்த இடத்தில் காணவில்லை. திகைத்து விட்டார்கள்.
இறந்த தந்தையான வீரபாண்டியன் "பெண்கள் விஷயத்தில்" கொஞ்சம் ஈடுபாடு கொண்டவர். எப்போதும் காமக்கிழத்திகள் இவருடன் இருந்து கொண்டே இருப்பார்களாம். அவ்வாறு அவர் உயிருடன் இருந்த காலதிதல், காமக்கிழத்திகளுடன் உல்லாசமாக இருந்தபோது, அந்தப் பெண்கள், மன்னரின் கிரீடத்தை "லவட்டிக் கொண்டு" போய்விட்டனர். இப்போது மன்னரின் கிரீடம் என்னும் முடி, அந்த பெண்கள் கையில் உள்ளதாக தெரியவருகிறது. மந்திரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நிற்கிறார்கள்.
இப்போது சிவபெருமான் மாறு வேடத்தில் வருகிறார்; ஒரு வணிகனைப் போல வேடம் அணிந்திருக்கிறார்; மிக அதிகமான மாணிக்கங்கள் கொண்ட ஒரு பொட்டலத்துடன் அந்த பெண்கள் வசித்து இடத்திற்குச் சென்று, அவர்கள் வேண்டும் அளவுக்கு மாணிக்கங்களைக் கொடுத்து, அந்த மணிமுடியைப் பெற்றுக் கொண்டார். அதை கொண்டு வந்து மந்திரிகளிடம் ஒப்படைத்து, அபிஷேக பாண்டியனுக்கு முடி சூட்டினார்கள்.
இவ்வாறு, மணிமுடி இல்லாமல், முடிசூட்டும் விழா குழப்பத்தில் இருந்தபோது, அங்கு சிவன் திருவிளையாடல் மூலம் அதை கொண்டுவந்து சேர்த்த விளையாடலே, பதினேழாவது திருவிளையாடல்.

**

No comments:

Post a Comment