திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகம்
மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.
வேதத்திலுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந்தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையிலுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.
முத்திதருவது நீறு முனிவரணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர்புகழ்வது நீறு
பத்திதருவது நீறு பரவ இனியது நீறு
சித்திதருவது நீறு திருஆல வாயான் திருநீறே.
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந்தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந்தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத்தோர்களுக்
கெல்லாம் ஆசைகெடுப்பது நீறு வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.
அருத்தமதாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தமதாவது நீறு புண்ணியர்பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகைசூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.
எயிலதுவட்டது நீறு விருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தாலவாயான் திருநீறே.
இராவணன்மேலது நீறு எண்ணத்தகுவது நீறு
பராவணமாவது நீறு பாவமறுப்பது நீறு
தராவணமாவது நீறு தத்துவமாவது நீறு
அரா வணங்குந் திரு மேனி ஆலவாயான் திருநீறே.
மாலொடயனறி யாதவண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந்தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றெம்மால வாயான் திருநீறே.
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங்கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப்பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே.
ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவாயான்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான்சம்மந்தன்
தேற்றித் தென்ன்னுடலுற்ற தீப்பிணி யாயினதீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
**
No comments:
Post a Comment