திருஞானசம்பந்தர்
தேவாரம்
இடரினுந் தளரினும்
எனதுறுநோய்
தொடரினும் உனகழல்
தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு
கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய
வேதியனே
இதுவோ எமையாளுமாறு
ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடுதுறை யரனே.
வாழினுஞ் சாவினும்
வருந்தினும்போய்
வீழினும் உனகழல்
விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல்
தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த
புண்ணியனே
இதுவோ எமையாளுமாறு
ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடுதுறை யரனே.
நனவினுங் கனவினும்
நம்பாவுன்னை
மனவினும் வழிபடல்
மறவேன் அம்மான்
புனல்விரி
நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு
கையவனே
இதுவோ எமையாளுமாறு
ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடுதுறை யரனே.
தும்மலோ டருந்துயர்
தோன்றிடினும்
அம்மலர் அடியலால்
அரற்றா தென்நாக்
கைமல்கு வரிசிலைக்
கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ
முனிந்தவனே
இதுவோ எமையாளுமாறு
ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடுதுறை யரனே.
கையது வீழினுங்
கழிவுறினும்
செய்கழல் அடியலால்
சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர்
குலாயசென்னி
மையணி மிடறுடை
மறையவனே
இதுவோ எமையாளுமாறு
ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடுதுறை யரனே.
வெந்துயர் தோன்றியோர்
வெருவுறினும்
எந்தாயுன் அடியலால்
ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண்
டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி
சங்கரனே
இதுவோ எமையாளுமாறு
ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடுதுறை யரனே.
வெப்பொடு விரவியோர்
வினைவரினும்
அப்பாவுன் னடியலால்
அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை
யுருவழிய
அப்படி யழலெழ
விழித்தவனே
இதுவோ எமையாளுமாறு
ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடுதுறை யரனே.
பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழல்அலாற்
சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி
இராவணனை
ஆரிடர் படவரை
யடர்த்தவனே
இதுவோ எமையாளுமாறு
ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடுதுறை யரனே.
உண்ணினும்
பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால்
உரையாதென்நாக்
கண்ண்ணுங் கடிகமழ்
தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி
தாயவனே
இதுவோ எமையாளுமாறு
ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடுதுறை யரனே.
பித்தொடு மயங்கியோர்
பிணிவரினும்
அத்தாவுன் அடியலால்
அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும்
புறனுரைக்கப்
பத்தர்கட்
கருள்செய்து பயின்றவனே
இதுவோ எமையாளுமாறு
ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடுதுறை யரனே.
அலைபுனல் ஆவடு
துறையமர்ந்த
இலைநுனை வேற்படை
யெம்இறையை
நலம்மிகு ஞானசம்
பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ்
மாலைவல்லார்
இதுவோ எமையாளுமாறு
ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடுதுறை யரனே.
**
No comments:
Post a Comment