திருஞானசம்பந்தரின்
பூம்பாவை திருப்பதிகம்
மட்டிட்ட புன்னையங்
கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான்
கபாலீச் சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின்
உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே
போதியோ பூம்பாவாய்!
மைப்பயந்த ஒண்கண்
மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான்
கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும்
அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே
போதியோ பூம்பாவாய்!
வளைக்கை மடநல்லார்
மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்
சரத்தான் தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார்
தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய்!
ஊர்திரை வேலை
யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார்
கொற்றங்கொள் சேரிதனில்
கார்திரு சோலைக்
கபாலீச் சரம் அமர்ந்தான்
ஆதிரை நாள் காணாதே
போதியோ பூம்பாவாய்!
மைப்பூசும் ஒண்கண்
மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
நெய்பூசும்
ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே
போதியோ பூம்பாவாய்!
மடலார்ந்த தெங்கின்
மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
அடல் ஆனேறு ஊரும்
அடிகளடிபரவி
நடமாடல் காணாதே
போதியோ பூம்பாவாய்!
மலிவிழா வீதி
மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான்
கபாலீச் சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய்
பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே
போதியோ பூம்பாவாய்!
தண்ணா அரக்கன்தோள்
சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக்
கபாலீச் சரம்அமர்ந்தான்
பண்ணார் பதினெண்
கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே
போதியோ பூம்பாவாய்!
நற்றா மரைமலர்மேல்
நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா
மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங்
கபாலீச் சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே
போதியோ பூம்பாவாய்!
உரிஞ்சாய வாழ்க்கை
அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க
ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த
கபாலீச் சரம்அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே
போதியோ பூம்பாவாய்!
கானமர் சோலைக்
கபாலீச் சரம்அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப்
பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம்பந்தன்
நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம் பந்தத்
தவரோடும் வாழ்வாரே.
**
No comments:
Post a Comment