Monday, March 7, 2016

இதோபதேசம்



இதோபதேசம்
(கழுகும் பூனையும் கதை)

கங்கையாற்றங்கரையில் கிருத்திரகூடம் என்னும் மலை இருக்கிறது; அங்கு இருக்கும் ஒரு மரப் பொந்தில் கண்களும் நகங்களும் இல்லாத ஒரு கழுகு இருக்கிறது; அந்த கழுகின் பெயர் சரற்கவன்; அந்த மரத்தில் மற்ற மற்ற பறைவைகளும் வாழ்ந்து வருகின்றன; அந்த கழுகின் மீது இரக்கப்பட்டு, மற்ற பறவைகள், தங்கள் தங்கள் உணவில் ஒரு சிறு கவளத்தை அந்தக் கழுகுக்கு தினம் தினம் கொடுத்து வந்தன;

ஒருநாள் ஒரு பூனை அங்கு வந்தது; அதைப் பார்த்த மற்ற பறவைகளின் குஞ்சுப் பறவைகள் எல்லாம் பயந்து அலறி நடுக்கின; அந்த அலறலைக் கேட்ட கழுகு, "இங்கு வந்தவன் யார்?" என்று கேட்டது; வந்த பூனையோ, பயந்து, "என் உயிர் பிழைத்தல் அரிது; கிட்ட நிற்பதால், விலகி ஓடவும் முடியாது; வருவது வரட்டும்; நம்பிக்கையுடன் இருப்பேன்" என்று எண்ணிக் கொண்டு, கழுகின் கிட்டப் போய், "சுவாமி, நமஸ்காரம்!" என்றது அந்தப் பூனை; கழுகோ, இது பூனைதான் என்று சத்தத்தை வைத்துத் தெரிந்து கொண்டு, "இங்கு உனக்கென்ன வேலை? தூரப்போ! இல்லையென்றால், உன்னைக் கொன்று விடுவேன்" என்று விரட்டியது;

அதற்குப் பூனையோ, "என் வார்த்தையை சற்றே நீங்கள் கேட்க வேண்டும்; கேட்டபின்னரும், நான் கொல்லப்பட வேண்டியவன் என்று நீங்கள் நினைத்தால், என்னை நீங்கள் கொல்லலாம்" என்று கூறியது;

இதனால், கழுகு சிறிது மன நிம்மதியடைந்து, பூனை சொல்வதைக் கேட்டது;

"நான் இந்தக் கங்கையில் எப்போதும் தீர்த்தமாடி வருகின்றேன்; நான், மாமிசத்தை ஒருபோதும் சாப்பிடுவதில்லை; பிரமச்சரியம், சாந்திராயணம், முதலிய விரதங்களை எல்லாம் அனுட்டித்து வருகிறேன்; உங்களின் நற்குணங்களும், தரும சாத்திர உணர்வுகளும், உங்களை மற்ற பறவைகள் பாராட்டி பேசுவதையும் கேட்டிருக்கிறேன்; எனவே, வயதிலும், அறிவிலும், முதிர்ந்த உங்களின் தரும உபதேசத்தை கேட்டு அறியும்படி உங்களிடம் வந்திருக்கிறேன்; தரும ஞானியாகிய நீங்கள், அதிதியாகிய என்னைக் கொல்ல மாட்டீர்கள் என்று தெரியும்; இல்வாழ்க்கையில் இருப்பவரின் தருமங்களை சொல்கிறேன் கேளும்; வீட்டுக்கு வந்தவன் பகைவனாக இருந்தாலும் அவனுக்கு அதிதி சற்காரஞ் செய்தல் வேண்டும்; மரமானது தன்னை வெட்டிபவனுக்கும் நிழல் கொடுக்கின்றது; வீட்டிலே உணவு இல்லையாயின் இன் சொல்லாவது கூறி அதிதியை வழிபடல் வேண்டும்; அதிதி எல்லோராலும் போற்றத்தக்கவன்; வீட்டிற்கு வந்த அதிதி வெறுப்புடன் வெளியேறிப் போனால், வீட்டில் வாழ்பவனுக்குப் பாவம் வந்து சேரும்; செய்து வைத்த புண்ணியமும் நீங்கிவிடும்: அதிதி எல்லாத் தேவர்களின் வடிவாகவும் இருக்கின்றான்" என்றது அந்தப் பூனை;

"பூனைகள் எல்லாமே மாமிசம் சாப்பிடும்; இங்கு பறவைக் குஞ்சுகள் இருக்கின்றன; அதனால்தான் நான், உன்னை விரட்டி விடுவதற்காக, அப்படிச் சொன்னேன்" என்றது கழுகு.

இதைக் கேட்ட பூனை, தன் காதுகளைப் பொத்திக் கொண்டு கூறியது;
"கிருஷ்ணா! கிருஷ்ணா!! நான் தரும சாத்திரம் கேட்டிருக்கிறேன்; என்னிடத்தில் அவா (ஆசை) என்பதில்லை; சாந்திராயண விரதமும் முடித்திருக்கிறேன்; கொல்லாமையே பெரும் தருமம் என்பது சமயிகள் யாவருக்கும் சம்மதம்; கொலை செய்யாதவரும், பரோபகாரிகளும் சொர்க்கம் போகின்றனர்; தருமம் என்னும் நண்பன் ஒருவனே  மரணத்தின் பின்னும் தொடர்கிறான்; மற்றவை எல்லாம் உடல்போலவே இங்கே அழிந்துவிடும்: காட்டிலே முளைக்கும் புல் முதலியனவற்றை, உண்டு வாழும் மிருகங்களை எவன் கொல்லுவான்?" என்றது அந்தப் பூனை.

இவ்வாறு பூனை கூறி, ஒருவாறு, கழுகுக்கு விசுவாசத்தை உண்டாக்கி விட்டது; அதனால், அந்த பொந்திலேயே அந்த பூனையும் வசித்து வந்தது;
சிலநாட்களில், இரகசியமாக இந்த பூனை வெளியேறி வந்து, யாருக்கும் தெரியாமல், பறவைக் குஞ்சுகளை தூக்கிக் கொண்டுவந்து உண்டு வந்தது;

குஞ்சுகள் காணாமல் போனதை அறிந்த பறவைகள் அழுது புலம்பின; விசாரனை ஆரம்பித்தது; விசாரனை ஆரம்பமாகிறது என்று அறிந்த பூனை, மெதுவாக பொந்தை விட்டுக் கிளம்பி வெளியேறி விட்டது; குஞ்சுகளைத் தேடிய ஒரு பறவை, இந்த பொந்தில், பறவைக் குஞ்சுகளின் எலும்புகள் கிடப்பதைப் பார்த்தது; அதற்கு கழுகுமேல் ஒரு சந்தேகம் வந்துவிட்டது; மற்ற பறவைகளுக்கும் இதைச் சொன்னவுடன், அவைகள் ஆத்திரம் அடைந்து, அந்த கழுகைக் கொன்று விட்டன;
"இரக்கம் தனக்கே வினையாகிவிடும்".
**
(இதோபதேசம் என்பது இதம்+உபதேசம்; இதம் என்னும் நன்மைதரும் உபதேசம் ஆகும்; இதை  பல நீதிக்கதைகளாக விஷ்ணுசர்மா என்ற பண்டிதர், அரச குமாரர்களுக்கு கூறியதாகச் சொல்லப்படுகிறது.)


No comments:

Post a Comment