இதோபதேசம்
(கழுகும் பூனையும் கதை)
கங்கையாற்றங்கரையில்
கிருத்திரகூடம் என்னும் மலை இருக்கிறது; அங்கு இருக்கும் ஒரு மரப்
பொந்தில் கண்களும் நகங்களும் இல்லாத ஒரு கழுகு இருக்கிறது; அந்த
கழுகின் பெயர் சரற்கவன்; அந்த மரத்தில் மற்ற மற்ற பறைவைகளும்
வாழ்ந்து வருகின்றன; அந்த கழுகின் மீது இரக்கப்பட்டு,
மற்ற பறவைகள், தங்கள் தங்கள் உணவில் ஒரு சிறு
கவளத்தை அந்தக் கழுகுக்கு தினம் தினம் கொடுத்து வந்தன;
ஒருநாள் ஒரு பூனை
அங்கு வந்தது; அதைப் பார்த்த மற்ற பறவைகளின்
குஞ்சுப் பறவைகள் எல்லாம் பயந்து அலறி நடுக்கின; அந்த
அலறலைக் கேட்ட கழுகு, "இங்கு வந்தவன் யார்?"
என்று கேட்டது; வந்த பூனையோ, பயந்து, "என் உயிர் பிழைத்தல் அரிது; கிட்ட நிற்பதால், விலகி ஓடவும் முடியாது; வருவது வரட்டும்; நம்பிக்கையுடன் இருப்பேன்"
என்று எண்ணிக் கொண்டு, கழுகின் கிட்டப் போய், "சுவாமி, நமஸ்காரம்!" என்றது அந்தப் பூனை;
கழுகோ, இது பூனைதான் என்று சத்தத்தை வைத்துத்
தெரிந்து கொண்டு, "இங்கு உனக்கென்ன வேலை? தூரப்போ! இல்லையென்றால், உன்னைக் கொன்று
விடுவேன்" என்று விரட்டியது;
அதற்குப் பூனையோ, "என் வார்த்தையை சற்றே நீங்கள் கேட்க வேண்டும்;
கேட்டபின்னரும், நான் கொல்லப்பட வேண்டியவன்
என்று நீங்கள் நினைத்தால், என்னை நீங்கள் கொல்லலாம்"
என்று கூறியது;
இதனால், கழுகு சிறிது மன நிம்மதியடைந்து, பூனை சொல்வதைக் கேட்டது;
"நான் இந்தக்
கங்கையில் எப்போதும் தீர்த்தமாடி வருகின்றேன்; நான்,
மாமிசத்தை ஒருபோதும் சாப்பிடுவதில்லை; பிரமச்சரியம்,
சாந்திராயணம், முதலிய விரதங்களை எல்லாம்
அனுட்டித்து வருகிறேன்; உங்களின் நற்குணங்களும், தரும சாத்திர உணர்வுகளும், உங்களை மற்ற பறவைகள்
பாராட்டி பேசுவதையும் கேட்டிருக்கிறேன்; எனவே, வயதிலும், அறிவிலும், முதிர்ந்த
உங்களின் தரும உபதேசத்தை கேட்டு அறியும்படி உங்களிடம் வந்திருக்கிறேன்; தரும ஞானியாகிய நீங்கள், அதிதியாகிய என்னைக் கொல்ல
மாட்டீர்கள் என்று தெரியும்; இல்வாழ்க்கையில் இருப்பவரின்
தருமங்களை சொல்கிறேன் கேளும்; வீட்டுக்கு வந்தவன் பகைவனாக
இருந்தாலும் அவனுக்கு அதிதி சற்காரஞ் செய்தல் வேண்டும்; மரமானது
தன்னை வெட்டிபவனுக்கும் நிழல் கொடுக்கின்றது; வீட்டிலே உணவு
இல்லையாயின் இன் சொல்லாவது கூறி அதிதியை வழிபடல் வேண்டும்; அதிதி
எல்லோராலும் போற்றத்தக்கவன்; வீட்டிற்கு வந்த அதிதி
வெறுப்புடன் வெளியேறிப் போனால், வீட்டில் வாழ்பவனுக்குப்
பாவம் வந்து சேரும்; செய்து வைத்த புண்ணியமும் நீங்கிவிடும்:
அதிதி எல்லாத் தேவர்களின் வடிவாகவும் இருக்கின்றான்" என்றது அந்தப் பூனை;
"பூனைகள்
எல்லாமே மாமிசம் சாப்பிடும்; இங்கு பறவைக் குஞ்சுகள்
இருக்கின்றன; அதனால்தான் நான், உன்னை
விரட்டி விடுவதற்காக, அப்படிச் சொன்னேன்" என்றது கழுகு.
இதைக் கேட்ட பூனை, தன் காதுகளைப் பொத்திக் கொண்டு கூறியது;
"கிருஷ்ணா!
கிருஷ்ணா!! நான் தரும சாத்திரம் கேட்டிருக்கிறேன்; என்னிடத்தில்
அவா (ஆசை) என்பதில்லை; சாந்திராயண விரதமும்
முடித்திருக்கிறேன்; கொல்லாமையே பெரும் தருமம் என்பது
சமயிகள் யாவருக்கும் சம்மதம்; கொலை செய்யாதவரும், பரோபகாரிகளும் சொர்க்கம் போகின்றனர்; தருமம் என்னும்
நண்பன் ஒருவனே மரணத்தின் பின்னும்
தொடர்கிறான்; மற்றவை எல்லாம் உடல்போலவே இங்கே அழிந்துவிடும்:
காட்டிலே முளைக்கும் புல் முதலியனவற்றை, உண்டு வாழும்
மிருகங்களை எவன் கொல்லுவான்?" என்றது அந்தப் பூனை.
இவ்வாறு பூனை கூறி, ஒருவாறு, கழுகுக்கு விசுவாசத்தை
உண்டாக்கி விட்டது; அதனால், அந்த
பொந்திலேயே அந்த பூனையும் வசித்து வந்தது;
சிலநாட்களில், இரகசியமாக இந்த பூனை வெளியேறி வந்து, யாருக்கும் தெரியாமல், பறவைக் குஞ்சுகளை தூக்கிக்
கொண்டுவந்து உண்டு வந்தது;
குஞ்சுகள் காணாமல்
போனதை அறிந்த பறவைகள் அழுது புலம்பின; விசாரனை ஆரம்பித்தது;
விசாரனை ஆரம்பமாகிறது என்று அறிந்த பூனை, மெதுவாக
பொந்தை விட்டுக் கிளம்பி வெளியேறி விட்டது; குஞ்சுகளைத்
தேடிய ஒரு பறவை, இந்த பொந்தில், பறவைக்
குஞ்சுகளின் எலும்புகள் கிடப்பதைப் பார்த்தது; அதற்கு
கழுகுமேல் ஒரு சந்தேகம் வந்துவிட்டது; மற்ற பறவைகளுக்கும்
இதைச் சொன்னவுடன், அவைகள் ஆத்திரம் அடைந்து, அந்த கழுகைக் கொன்று விட்டன;
"இரக்கம் தனக்கே
வினையாகிவிடும்".
**
(இதோபதேசம் என்பது இதம்+உபதேசம்; இதம் என்னும்
நன்மைதரும் உபதேசம் ஆகும்; இதை பல
நீதிக்கதைகளாக விஷ்ணுசர்மா என்ற பண்டிதர், அரச குமாரர்களுக்கு கூறியதாகச்
சொல்லப்படுகிறது.)
No comments:
Post a Comment