Sunday, March 6, 2016

கந்தரலங்காரம்-93


கந்தரலங்காரம்-93

மண் கமழ்  உந்தித் திருமால் வலம்புரி ஓசை அந்த
விண் கமழ் சோலையும் வாவியும் கேட்டது வேல் எடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளை திருவரையில்
கிண்கிணி ஓசை பதினால் உலகமும் கேட்டதுவே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-93)
"மண் மணம் கமழும் உந்தியை (வயிற்றை) உடைய திருமாலின் வலம்புரி சங்கின் ஓசையானது அந்த விண்ணுலகில் உள்ள நறுமணம் கமழும் சோலையும், வாவி என்னும் நீர்தடாகத்திலும் கேட்டது; வேல் என்னும் வேலாயுதத்தை கையில் எடுத்து, திண் என்னும் திண்மையான கிரி என்னும் மலைகள் பொடியாகிச் சிந்தும்படி விளையாடும் பிள்ளையாகிய முருகனே! உன் திரு இடையில் கட்டி இருக்கும் கிண்கிணியின் ஒலியானது, பதினான்கு உலகங்களுக்குமே கேட்டதுவே!"

மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த
விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளை திருவரையிற்
கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே.
(கந்தரலங்காரம்-93)


No comments:

Post a Comment